Wednesday, November 14, 2012

சர்க்கரை நோயாளிகள் இனிப்பை விரும்புவது ஏன்?...

Stress பற்றிய என் பதிவுத்தொடர் தனியாக தொடரும்... அதில் நிறைய பேச இருப்பதால் அவ்வப்போது மற்ற சில விசயங்களைப் பற்றி தனியாகப் பதிவிடுகிறேன்... இன்று சர்க்கரை நோயாளிகள் தினம்... அவர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினை ஒன்றை இன்றுப் பார்ப்போம்.

சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒரு வயதானவர் வந்திருந்தார். மிகத் தீவிர மனச்சோர்விலிருந்த அவரிடம் பேசும்போது மெல்ல அவரின் மன அழுத்தத்திற்கான ஆரம்ப நிகழ்வைக் கேட்டேன்... முதலில் தயங்கியவர் பின் "என்னை கேவலமாக நினைக்காதீர்கள்..." என்ற பீடிகையுடன் பேசத்தொடங்கினார். 

அவருக்கு சமீபத்தில்தான் சர்க்கரை நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். கண்டறிந்ததும் அவர் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி. உடனே 144 பாய்ந்தது. தனிச்சமையல்... இது நாள் வரை அவர் மிகவும் விரும்பிய அத்தனை உணவுக்கும் தடை... அதையும் மீறி அவர் ஏதாவது உணவை சாப்பிட்டால் உடனே அவரை ஒரு மாறி பார்ப்பது... "வாயை கட்டுங்க..." போன்ற கமெண்ட்கள்... கொஞ்ச காலம் கழித்து அவரின் உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்திருக்கிறது. வீட்டில் எந்த உணவுப்பொருள் வைத்தாலும் உடனே மாயமாகியிருக்கிறது. அதை தெரிந்து அவர் மனைவி கண்டிக்க சண்டைகள் சச்சரவுகள். சிறிது சிறிதாக அவர் மன நிம்மதி இழக்கத் தொடங்கினார். அதன் விளைவாக அவரின் உணவுப்பழக்கத்தைப் பற்றிய குற்ற உணர்ச்சி.... தனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற தன்னிரக்கம்... என்றுப் பிரச்சினை வளர்ந்து இறுதியாக தீவிர மன அழுத்தத்துடன் என்னிடம் வந்துள்ளார். இது தெரிந்ததும் அவரின் மனைவியிடம் "ஏம்மா...ஷுகர் அளவு அவருக்கு எப்பவாவது கூடியிருக்கா?" என்றுக் கேட்டேன். "இல்லை சார்... கூடியிருமோன்னு ஒரு பயம்தான்" என்றார்.

இதுதான் பிரச்சினை. நம் சமுதாயத்தில் உணவுக்கட்டுப்பாடு என்பது உணவுகளைத் தவிர்ப்பதென்று ஒரு நம்பிக்கை உலாவுகிறது. நான் மேலே சொன்னது ஒரு Extreme உதாரணம்.  ஆனால் வீட்டில் ஒரு சர்க்கரை நோயாளியோ ரத்தக்கொதிப்பு வந்தவரோ உள்ளவர்கள் அவர்கள் சாப்பாட்டை கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிவார்கள். பல சமயம் ஏன் இந்தளவுக்கு அவர்கள் தவிர்க்க வேண்டியப் பொருட்களை நாடுகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. இந்தப்பதிவில் சர்க்கரை நோயாளிகளின் இந்தப் பழக்கத்திற்கான உளவியல் காரணங்கள் மற்றும் அதைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளை பற்றி விளக்குகிறேன்.

முதலில் சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியமா? ஏன்? என்பதைப்பற்றி பார்ப்போம்.

சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். இளம் வயதிலேயே வருவது Type 1. நமக்கு இன்சுலின் சுரக்கும் திசுக்கள் மரபியல் ரீதியாக அழிக்கப்படுவதினால் வருவது. இது நம் சமுதாயத்தில் சற்றே குறைவு. ஆனால் நம்மில் பலருக்கு வயதானப்பின் வருவது இரண்டாம் வகை. (Type 2). இதில் இன்சுலின் சுரக்கிறது ஆனால் அது செயல்பட வேண்டிய இடங்களில் அதனால் முழுமையாக செயல்பட முடியவில்லை. எந்த வகையானாலும் அடிப்படைப் பிரச்சினை - "இன்சுலின் இல்லை".

இந்த இன்சுலினின் வேலை நம் திசுக்களுக்குத் தேவையான சக்தியை அதனுள்  செலுத்துவது... சக்தி என்றால் நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் (நாம் வழக்கமாக சொல்லும் ஷுகர்)... இன்சுலின்  இல்லாத போது இந்த சுகர் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் இரண்டு... சக்தி கிடைக்க வேண்டிய திசுக்கள் இன்னும் அதே நிலையிலேயே இருக்கின்றன... அதீதமாக இருக்கும் இந்த ஷுகர் தேவையில்லாத இடங்களில் குறிப்பாக ரத்த நாளங்களில் படிந்து சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்நலம் கெட்டுப் போகக் காரணமாகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் உணவு உட்கொண்டும் திசுயளவில் பட்டினி கிடப்பதுப்போல் இருக்கின்றனர்.   ஆகையால் இவர்கள் மேலும் மேலும் உணவு உட்கொள்ள அது மேலும் ஷுகர் அளவையே அதிகரிக்கறது. ஆகவே இவர்களுக்கு உணவில் கார்போஹைட்ரேட் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் அந்த வியாதி வரும் முன் கடைப்பிடித்த உணவுப்பழக்கங்களை அப்படியே மேற்கொள்ள விரும்புகிறார்கள். உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதை தட்டிக்கழிக்கின்றனர். உணவில் மாற்றம் கொண்டு வருவதை எதிர்க்கிறார்கள். குழந்தைகள் போல் அடம் பிடித்துச் சாப்பிடுகிறார்கள். அதையும் மீறி தடுத்தால் யாரும் பார்க்காத நேரம் கள்ளத்தனமாக இரண்டு இனிப்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு கமுக்கமாக உட்காந்திருப்பார்கள்.  ஏன் இந்த உணவு வெறி? இவர்களின் இந்த செயலுக்கு வெறும் திசுக்களில் சக்தி கிடைக்காததே காரணம் என்று நாம் முடிக்க முடியுமா? இதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்கள் என்ன?

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதென்று கண்டறிந்ததும் அவரின் மனநிலையில் ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த விழிப்புணர்வு யுகத்தில் நம்மில் பலருக்கு சர்க்கரை நோய் பற்றிய ஒரு அறிமுகம் உள்ளது. ஆகவே இந்த வியாதியின் சிக்கல்கள், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் அவர்களை பயமுறுத்துகிறது. கவலையடையச்செய்கிறது. இந்த உணர்வுகளைத் தவிர்க்க அவர்கள் மனதளவில் தங்கள் வியாதியையும் அதற்கு தேவையான மாற்றங்களையும் மறுக்க ஆரம்பிக்கின்றனர். சிலர் வெளிப்படையாக செய்கின்றனர். சிலர் மனதிற்குள் செய்கின்றனர்.இதனால் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் செய்ய முடியவில்லை. யோசித்துப்பாருங்கள்... வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும் எத்தனை பேர் தொடர்ந்து போகின்றனர்?. கொஞ்ச நாட்கள் சென்று விட்டு அதை தவிர்ப்பதற்கான காரணங்களை புதிது புதிதாக கண்டுப்பிடிக்க ஆரம்பிப்பார்கள். ஏன்? மனதளவில் உள்ள அந்த மறுதலித்தல். எனக்குத்தான் பிரச்சினையே இல்லையே... இதை ஏன் நான் செய்ய வேண்டும் என்ற உள்மனதின் கேள்வி.

அதேப்போல் அடுத்து எழும் பிரச்சினை குடும்பத்தாரின் எதிர்வினைகள். நோயாளியை போல் அவரின் குடும்பத்தாரும் பயம், கவலை போன்ற உணர்வுகளுக்கு ஆளாகின்றனர்.  மேலும் இதுநாள் வரை நாம் சரியாக கவனிக்காமல்தான்  இது போல் வந்துவிட்டதோ என்ற குற்றயுணர்வும் சேர்ந்து கொள்கிறது. இத்தனை நாட்கள் விட்டதை சேர்த்துப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஏற்கனவே மனதுக்குள் மறுதலித்தலில் இருக்கும் நோயாளிகளுக்கு அது ஒரு எதிர்மறை எண்ணத்தையே உண்டாக்குகிறது. கட்டுப்பாடுகளை மீற ஆரம்பிக்கின்றனர். அது அவர்களின் குடும்பத்தாரிடம் மேலும் பிரச்சினையே உண்டாக்க, இது ஒரு முடிவில்லா சுழற்சியாகின்றது.

இன்னும் சிலப் பேருக்கு மனக்கவலைகள், Stress போன்றவற்றை குறைக்க உணவை ஒரு ஊன்றுக்கோலாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்களுக்கு சற்றே சிறிது மன சஞ்சலம் வந்தாலும் உடனே உணவை நாடுவார்கள். உணவு இவர்களுக்கு ஒரு உற்சாகப்பானம்.

இன்னும் ஒரு சில பேர் இருப்பார்கள்.போக வர ஏதாவது எடுத்து வாயில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏன்? இதற்கு நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். பசி என்பது வேறு உணவில் திருப்தி என்பது வேறு. பசிக்கு சாப்பிட்டால் உடம்பில் ஹார்மோன்கள் சுரந்து அதன் பின் பசி எடுக்காது. ஆனால் உணவில் திருப்தி ஏற்படுவதென்பது நம் சுற்றுப்புறதிலிருக்கும் வேறு பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக பசியோடு ஒரு மதியம் ஹோட்டலுக்கு வருகிறீர்கள். புல் மீல்ஸ் சொல்லி சாப்பிட்டதும் உங்கள் பசி தீர்ந்து விடும். ஆனால் திருப்தி வருகிறதா? அந்த வாழைப்பழம், பீடா போட்டப்பின் ஏற்படும் உணர்வே உணவு  உண்ட திருப்தியை தருகிறது. அதே போல் உணவுக்குப்பின் உண்ணும இனிப்பு, நன்றாயிருக்கிறது என்று எக்ஸ்ட்ரா சாப்பிடும் உணவு, தட்டு நிறையவில்லை என்று போட்டுக்கொள்ளும் சாதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். இதை எதிர்க்கொள்ள என்ன செய்வது?

1. சர்க்கரை நோய் வந்ததும் ஒரு நல்ல உணவியல் நிபுணர் (Dietitian) ஆலோசனையைப் பெறுங்கள். முக்கியமாக உங்கள் உணவில் தற்பொழுது உள்ள சர்க்கரையின் அளவைக்கூட்ட கூடிய விஷயங்களை கண்டறியுங்கள். அதை தவிர்ப்பது எப்படியென்று உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்யுங்கள். ஆலோசித்து ஒரு மெனுவை தயார் செய்யுங்கள். அதை கடைப்பிடியுங்கள். டயட் என்றாலே விரும்பும் உணவுகளை புறக்கணிப்பதில்லை. அப்படி செய்தால் ஒரு நாளைக்கு மேல் உங்களால் அதை கடைபிடிக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. டயட் கடினம் ஆவது விரும்பிய உணவை புறக்கணிக்கும் போது தான். அதை விட சத்தான உணவிற்கு மாறுங்கள். விரைவில் அதை ரசிக்க தொடங்கி விடுவீர்கள்.

2. உங்கள் குடும்பத்தாருக்கு வரும் வியாதிகளுக்கு நீங்கள் காரணமாக முடியாது என்பதை உணருங்கள். அதீத கட்டுப்பாடும் அவர்களை குறை சொல்லுவதும்  எந்த பயனையும் தரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு உறுதுணையாய் இருங்கள். Diet Holidays கடைபிடியுங்கள். அதாவது நோய் வந்தவர்கள்  க்ளுகோஸ் குறிப்பிட்ட அளவு வர செய்தால் அவர்களுக்கு அன்றைக்கு டயட்டிலிருந்து விடுவித்து அவர்கள் விரும்பிய உணவுகளை சமைத்து தாருங்கள். அவர்கள் டயட் கடைபிடிக்காமல் விட்டால் அவர்களை குறைக்கூறாமல் அதற்கான காரணத்தை கண்டறிய முற்படுங்கள். உற்சாகமும் தட்டிகொடுத்தலும் சில சமயம் சினிமாத்தனமாக தோன்றினாலும் நோய் வந்தவர்களுக்கு மிக முக்கியம்.

3. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க டயட் மட்டுமே வழியில்லை. உடற்பயிற்சியும் முக்கியம். உடற்பயிற்சி என்றால் செல் பேசிக்கொண்டே காலாற நடப்பதோ அல்லது நடந்த களைப்பு தீர ஒரு வடையும் டீயும் சாப்பிடுவதோ இல்லை. வேர்வை வர நடங்கள். ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை - எப்பொழுதும் சட்டைப்பையில் ஒரு பிஸ்கட் வைத்திருங்கள் சட்டென்று குறையும் குளுக்கோஸ் அளவை சமாளிக்க.

4. உங்கள் உணவு மேற்கொள்ளும் சூழலை கவனியுங்கள். தட்டின் அளவை குறையுங்கள். தேவையில்லாத நொறுக்கு தீனியை வாங்காதீர்கள்.

5. உங்கள் தீவிர முயற்சியையும் மீறி மீண்டும் மீண்டும் இனிப்பை நாடுகிறீர்களா? எந்தெந்த சந்தர்ப்பத்தில் அப்படி செய்தீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு டயரியில் குறித்து வைத்தால்  கூட நலம். அதை ஆராயும்போது உங்களுக்கே புலப்படும். உணவை நீங்கள் ஒரு மன அழுத்தம் குறைக்கும் கருவியாக பயன்ப்படுத்துக்கிறீர்களா என்று. ஒரு நல்ல சங்கீதம், ஒரு நல்ல புத்தகம், நண்பர்களிடம் பேச்சு இவை போதாதா? யோசியுங்கள்...

இறுதியாக சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனி உணவு தேவையில்லை. நாம் தினம் உண்ணும் உணவிலேயே சில மாற்றங்களை செய்துக்கொண்டால் போதும். 100 சதவிகிதம் உணவில்  கார்போஹைட்ரேட்டை தவிர்க்க வேண்டியது அவசியமில்லை. உணவின் மேல் அதீத ஆசை தோன்றுவது எல்லா  சர்க்கரை நோயாளிக்கும் வருவதுதான். அது அவர்களின் தவறில்லை. ஆகையால் குற்ற உணர்ச்சியோ தாழ்வு மனப்பான்மையோ கொள்ளாமல் இதை எதிர்க்கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களால் முடியும்.

3 comments:

  1. நல்ல அவசியமான் கட்டுரை விஜய்.

    ReplyDelete
  2. well written sir

    ReplyDelete
  3. sir shall i this article in health care magazine with your name credit.

    ReplyDelete

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........