Monday, May 26, 2014

மனநலத்துறை - ஒரு அறிமுகம்

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இங்கே பதிவிடுகிறேன். இடைவெளி சிந்திக்க என்ன செய்தி சொல்ல என்று முடிவெடுக்க உதவியது. அதன் வெளிப்பாடாக அடுத்தடுத்து வரும் பதிவுகள் மன நலம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை பேசும். 

"நீங்க என்ன ஸ்பெஷலிஸ்ட் சார்?"
"சைக்கியாட்ரிஸ்ட்ங்க"
ஒரு நிமிடம் யோசிப்பார். "ஓ! நம்ம ஒண்ணு விட்ட மாமா பொண்ணு கூட உங்களை மாதிரிதான். சைக்காலஜிஸ்டு..."
"சைக்காலஜிஸ்ட் இல்லைங்க சைக்கியாட்ரிஸ்ட்"
"அதாங்க சொன்னேன். இந்த கவுன்சலிங் பண்ணுவீங்களே அதானே..."

புதிதாக யாரையாவது நான் சந்தித்தால் தவறாமல் நடக்கும் டயலாக் இது. இவர்களுக்கு என்றில்லை. எந்த மருத்துவம் சார்ந்த பத்திரிகையை எடுத்தாலும் மனநல மருத்துவர் ஆலோசகராகும் ஒரு உதாரணமாவது காட்ட முடியும். உண்மையில் இவர்களுக்குள் என்ன வேறுபாடு என்று தெரிந்து கொள்வது சரியான வழிக்காட்டுதலை பெற மிகவும் அவசியமாகும். இவர்களை தவிரவும் மனநலத்துறையில் உள்ள மற்ற சிலரையும் இவர்களின் மாறுப்பட்ட அணுகுமுறைகளையும் பற்றி பேசவே இந்த பதிவு.

1. மனநல மருத்துவர்.
மன நல மருத்துவர்கள் அடிப்படையில் மருத்துவர்கள். அதாவது MBBS படித்தவர்கள்.
அதன் பின் மேற்படிப்பு இரண்டு உண்டு :-
1. DPM  - Diploma in Psychological Medicine அதாவது பட்டய படிப்பு
2. M.D.(Psychiatry) - அதாவது பட்டப்படிப்பு.

வித்தியாசம்-  D.P.M இரண்டு வருடப்படிப்பு. M.D. - மூன்று வருட படிப்பு.

இவர்கள் மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் என்பதால் மனநல மருந்துகள் பரிந்துரைக்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உண்டு.  மனோதத்துவ சிகிச்சை முறைகளிலும் இவர்களுக்கு இந்த 2/3 வருடங்களில் பயிற்சி அளிக்கப்படும். சுருக்கமாக சொன்னால் ஆல்-ரவுண்டர்கள்.

2. மனநல ஆலோசகர்.
இங்கேதான் குழப்பம் ஆரம்பிக்கின்றது. மனோதத்துவம்(Psychology) ஒரு படிப்பு. அது தனியாக பட்டப்படிப்பாகவும் உள்ளது. சில படிப்புகளில் ஒரு பேப்பர் மட்டுமே இருக்கும் வகையிலும் உள்ளது. பட்டப்படிப்பு என்று எடுத்துக் கொண்டால் Bsc (Psychology) அதன் பின் Msc (Psychology) என்று உண்டு. இதை காலேஜ் பொய் முழு நேரப்படிப்பாக படிப்பவர்கள் உண்டு. கரஸ்ப்பாண்டன்ஸ் கோர்ஸாக படிப்பவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையிலுமே இவர்களுக்கு படிப்பு புத்தகம் மட்டும்தான். இந்த படிப்பின் நோக்கம் வைத்தியம் அளிப்பதில்லை. பலர் இதை முடித்தப்பின் கவுன்சிலர் என்று போட்டு நோயாளிகளை பார்க்கிறார்கள். இது தவறு. ஏட்டு சுரைக்காய்கள் என்றுமே கறிக்கு உதவாது. அப்படியென்றால் யார் உண்மையான மன நல ஆலோசகர்? இந்த படிப்புகளுக்குப் பின் MPhil(Clinical Psychology) என்று ஒரு படிப்பு உள்ளது. அதன் இரண்டு வருடத்தில் ஆறு மாதங்கள்(கல்லூரியை பொறுத்து மாறுபடும்) மனநலப் பிரிவில் நோயாளிகளை பார்ப்பார்கள். இவர்கள் மனோதத்துவ சிகிச்சை முறைகளில் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்கள். (ஏன் ஓரளவு? மனோதத்துவ சிகிச்சைகளை பற்றி பேசும் போது சொல்கிறேன்.) இதோடு விட்டால் பரவாயில்லை. இதிலும் ஒரு இக்கன்னா உண்டு. இதையும் கரஸ்ப்பாண்டன்ஸில் படிக்கலாம். நோயாளிகளை பார்க்காமல் எப்படி வைத்தியம் பார்க்க முடியும் என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இது தவிர கவுன்சலிங்க்கு என்றே சில படிப்புகள் உள்ளன. அதை முடித்தவர்கள் மனோதத்துவ நிபுணர்கள் கிடையாது. அவர்கள் கவுன்சலர்கள் மட்டுமே. கவுன்சலிங் மனோதத்துவ சிகிச்சைஆகாது.(பார்க்க: கவுன்சலிங் உண்மையில் என்ன?)

3. மனநல சமூகப்பணியாளர்கள்: (Psychiatric Social Workers)
இவர்கள் சமூகப்பணியாளர்களுக்கான அடிப்படை படிப்பையும், அதன் பின் மேல் படிப்பாக மனநல சமூகப்பணி படிப்பையும் முடித்தவர்கள். இவர்களும் கவுன்சலிங் போன்ற விஷயங்களில் ஈடுப்படலாம். அது தவிர பொது மக்களிடம் மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துதல், Group Therapy போன்ற குழு சிகிச்சை முறைகள் போன்றவற்றை செய்யலாம்.


இது தவிர மனநல செவிலியர்கள் போன்றோரும் மனநலத்துறையில் உள்ளனர். இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக செயல்படும்போது தான் மனநல மருத்துவம் முழுமையடையும். 
(Photo Courtesy: http://www.acadiahealthcare.com/wp-content/uploads/2011/09/meadowwood.jpg)