Thursday, December 27, 2012

மாணவர் தற்கொலை தடுப்பு முகாம்

எங்கடா ஆளைக் காணோம் என்று தேடிய, தேடாத நண்பர்களுக்கு.... கடந்த சில நாட்களாக எதுவும் எழுத தோன்றாமல் சிந்தனைகளும் நாட்களும் ஓடிக்கொண்டிருந்தன... அந்த தேங்கிய நிலையை உடைக்க என்ன செய்வதென்று யோசித்த போது ஏன் நாம் செய்வதையே பகிர்ந்திட கூடாதென்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு...
தற்சமயம் நான் வேலை செய்வது விழுப்புரம் மாவட்டத்தில். தமிழகத்தின் மிக பெரிய மாவட்டம். மாணவர்கள் தற்கொலைகள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்று. அதனை தடுக்க நாங்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சியே ஆசிரியருக்கான விழிப்புணர்வு முகாம். ஒரு வார காலத்தில் மாவட்டத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று ஆசிரியர்களுக்காக இதை நடத்துகிறோம். அதற்காக ஒரு கையேட்டை தயாரித்தோம். அதுவே இந்த பதிவு.

மாணவர் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் - கையேடு:
இன்றைய சமுதாயத்தில் மாணவர்களிடையே தற்கொலை என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. நம் விழுப்புரம் மாவட்டத்திலேயே ஒரு சிறுமி பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டது நம்மில் பலருக்கு மறந்திருக்காது. அதே போல் கடந்த ஜூன் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த சமயம் இதே போன்றதொரு முகாம் நம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. அந்த அன்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்து சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பின் ஆட்சியர் அவர்களின் முயற்சியால் மாணவர்களிடையே தற்கொலை தடுப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு திறன் வளர்க்க ஒரு செயல்த்திட்டம் உருவாக்கினோம். அதன் முதல் படியாக மாணவர்களுடன் நேரடி தொடர்பிலுள்ள அவர்களின் மதிப்பை பெற்ற தலைமையாசிரியர்களாகிய உங்களுக்கு தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவே இந்த முகாம்.
கலெக்டர் சம்பத் இந்த கையேட்டை வெளியிட்ட போது ...
உடன் எங்கள் இணை இயக்குநர் உதயகுமார், CEO திரு.முனுசாமி மற்றும்  ஆசிரியர்கள்

மாணவர் தற்கொலை – உண்மையான பிரச்சினையா?
National Crime records bureau அமைப்பின் கூற்றுப்படி நாளொன்றுக்கு நாடெங்கிலும் 7 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் இறக்கின்றார்கள். 2011 வருடம் மட்டும் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் 2381 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். (2009ல் 2000 பேர்). இது மொத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்டவர்களில் 1.8% ஆகும். 14 வயதுக்குட்பட்டவர்களில் மட்டும் 3035 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த எண்களில் இருந்து மாணவரிடையே தற்கொலை என்பது மிகவும் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்பது விளங்கும்.
மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்?
இதற்கு ஒரு காரணமென்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தற்கொலையும் ஒரு உயிரின் முடிவு. அதற்காக அவர்கள் தேடும் காரணங்களும் மாறுபடுகின்றன. ஆனால் மேலான காரணங்களை களைந்து விட்டு பார்த்தால் அடிப்படையில் சில பொதுவான காரணங்கள் உள்ளன.
மாணவர் உலகம் மூன்று தளங்களில் இயங்குகிறது. 
  • வீடு
  • பள்ளி
  • நண்பர்கள் மற்றும் விளையாட்டு

இவை ஒவ்வொன்றிலும் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் மாணவர்களின் மனநலனை பாதிக்கின்றது.
அமைதியான குடும்பச்சூழல் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. பெற்றோரிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், அவர்களின் குடி முதலிய பழக்கங்கள் மாணவர்களை அவர்களின் குடும்பத்திலிருந்து அன்னியப்படுத்துகின்றன. அதன் விளைவாக அன்பும், தன்னம்பிக்கையும் அவற்றை ஊட்ட வேண்டிய தாய், தந்தையரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. “நான் வேண்டாதவன்” என்ற எண்ணம் அழுத்தமாக அவன் மனதில் பதிகின்றது.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் பெரும்பங்கு கழிவது பள்ளிகளில்தான். அதே போல் பெற்றோரை போல் பல சமயங்களில் அவர்களிலும் மேலாக அவன் எதிர்ப்பார்ப்பது ஆசிரியர்களின் அபிப்பிராயத்தைதான். பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை தேர்வுகள். தோல்வியை காட்டிலும் அவர்களுக்கு மிக பெரிய பிரச்சினையாக இருப்பது குறைந்த மதிப்பெண்கள். காரணம் குறைந்த மதிப்பெண் பெறும் போது அவர்கள் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களோடு ஒப்பிடப்படுகிறார்கள். அந்த ஒப்பீட்டின் விளைவாக அவனுள்ளே “நீ எதற்கும் உதவாதவன்” என்ற எண்ணம் அவனுக்குள் உருவாகிறது. அதே போல் தேர்வில் தோல்வி என்பதும் மிக பெரிய பூதமாக அவனிடம் காட்டப்படுகிறது. “ஜெயித்தால்தான் உண்டு. தோற்றால் வாழ்க்கையே போய்விடும்” என்று திரும்ப திரும்ப சொல்லப்படும்போது தோல்வியடைந்தால் வாழ்க்கையேயில்லை என்று அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது.
அதேபோல் மாணவப்பருவத்தில் நண்பர்கள், நட்பு என்பது மிக முக்கியமாக தோன்றுகிறது. நண்பர்கள் தன் மேல் வைக்கும் மதிப்பு அவனின் மனவளர்ச்சிக்கு மிக முக்கியம். ஏதேனும் ஒரு காரணத்தால் (உ.ம். உருவக்குறைப்பாடுகளோ, கூச்ச சுபாவம்) அவன் நிராகரிக்கப்பட்டால் அவன் தனித்து விடப்படுகிறான். அதன் மூலம் “நான் தேவையற்றவன்” என்ற எண்ணம் அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கின்றது.
இவையாவும் மாணவர்களிடையே மனசோர்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனின் அச்சாணியை முறிக்கும் கடைசி சம்பவமாய் ஏதேனும் ஒரு விஷயம் நிகழ்கிறது. அது தேர்வில் தோல்வியோ, ஆசிரியரின் கண்டிப்பாகவோ அல்லது குடும்பத்தாரின் கண்டிப்பாகவோ இருக்கலாம். அதன் பின் இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று சாவை தேடுகிறார்கள்.
தற்கொலை தடுப்பு – ஆசிரியர்கள் பங்கு – சில பரிந்துரைகள்:
தற்கொலை என்பது தீடீர் முடிவல்ல. சிறிது சிறிதாக ஒரு மனிதன் அதை நோக்கி தள்ளப்படுகிறான். முன்பே குறிப்பிட்டிருந்ததை போல் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை கழிப்பது பள்ளியில்தான். ஆகவே ஆசிரியர்களே தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு மிக பெரிய உதவியாயிருக்க முடியும்.
1. தற்கொலையின் மிக முக்கிய காரணம் மனசோர்வு. அதை முதலிலேயே கண்டுப்பிடித்து விட்டாலே பாதிக்கும் மேல் தற்கொலைகளை தடுக்கலாம். மாணவர்களிடையே காணப்படும் மனசோர்வின் சில அறிகுறிகளை கண்டறிவது அவசியம்.
1.       தீடீரென்று மதிப்பெண் குறைவது.
2.       படிப்பு, விளையாட்டு என்று எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது.
3.       தனிமையை விரும்புவது.
4.       வகுப்பில் தீடீரென்று பிரச்சினை செய்வது.
5.       பசி, தூக்கம் குறைந்ததென்று கூறுதல்.
6.       நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துதல்.
7.       காரணமில்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்தல்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அந்த மாணவனை அழைத்து பேசுங்கள். பல சமயங்களில் தற்கொலை முயற்சி செய்பவர்கள் தேடுவது தங்களின் பிரச்சினையை காது கொடுத்து கேட்கும் ஒரு நபரைதான்.
2. மாணவர்களிடம் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களின் தோல்விகளை பெரிதுபடுத்திக்காட்டாமல் அவர்களை அதன் காரணங்களை ஆராய செய்யுங்கள். அவர்களின் தன்னம்பிக்கையை வளருங்கள்.
3. வகுப்புகளில் நீங்கள் வாழ்வில் சந்தித்த வெற்றிகளையும், தோல்விகளையும் பகிருங்கள். பிரச்சினைகளை சமாளித்த விதத்தை பற்றி நீங்கள் குறிப்பிடுவது அவர்களுக்கு மிக பெரிய ஊக்கமாக அமையும்.
4. மாணவர்களிடையே அதீத கேலி, கிண்டல் செய்பவர்களை கண்டியுங்கள். ஊனம் என்பது அருவறுப்பானதல்ல என்று விளக்குங்கள்.
5. ஒரு மாணவன் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால் அவர்களை கண்டிக்காமல் அவர்களின் காரணத்தை கேளுங்கள். அதற்கு தற்கொலை தவிர வேறு வழிகள் என்னவெல்லாம் உண்டென்று விளக்குங்கள். அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ, தனிப்பட்ட கவனம் செலுத்துவதோ வேண்டாம்.
6. அவர்களின் பிரச்சினைக்கு காரணம் பெற்றோர் என்றால் அவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் மாணவர்களின் மன நிலை எந்தளவுக்கு பாதித்துள்ளதென்று விளக்குங்கள்.
7. தற்கொலை பற்றி நேரடியாக வகுப்பில் பேசாதீர்கள். அதை விட பிரச்சினைகளை சமாளிக்கும் மற்ற வழிமுறைகளை பற்றி பேசுங்கள்.

மாணவர்களுக்கு அவர்களின் பிரச்சினையை சொல்ல சரியான நபரில்லாததுதான் பல தற்கொலைகளுக்கு காரணம். அவர்களின் குரலை கேட்க உங்களின் நேரத்தை ஒதுக்கி பொறுமையுடன் இருக்க முடியுமென்றால் பலர் வாழ்கை மாற நீங்கள் காரணமாயிருக்கலாம்.
******************************************************************************************************************************************************************************************************************************************
முகாம் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஒரு வார முகாமின் சுவாரசியங்களை அடுத்த பதிவில் பகிர்கின்றேன்.

1 comment:

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........