Tuesday, February 19, 2013

Stress - அறிந்த வார்த்தை அறியாத அர்த்தங்கள்... 3

Stress பற்றிய இந்த தொடருக்கு மிக நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இந்த முறை முழுமையாய் முடித்து விடுவதென்கின்ற உறுதியுடன் ஆரம்பிக்கிறேன். மீண்டும்...

சென்ற பதிவில் stress என்றாலே கவலை, பதட்டம்  தரும்  விஷயங்களால் உருவாவதா? என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன். அதற்கு பதில் சொல்ல நாம் சற்றே மற்றொரு கேள்வியை பார்க்க வேண்டும்.

Stress என்றால் என்ன?

மறுபடியும் முதல்லயிருந்தா???... என்று களைப்படைய வேண்டாம். கேள்வியை சற்றே மாற்றி கேட்கலாம்.

Stress என்ற வார்த்தை எதைக்குறிக்கிறது?

பதட்டம், படபடப்பு என்று நாம் உணரும் உணர்ச்சியையா? இல்லை அது  போன்ற உணர்ச்சியை தரும் சூழலையா?

Stress பற்றிய ஆராய்ச்சியின் பிரச்சினையே இதுதான்!!! Stress என்பது ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்ட அர்த்தம் வேறு. இன்று அது குறிக்கும் அர்த்தம் வேறு. ஆகவே குழப்பத்தை தவிர்க்க இன்று Stress பற்றி பேசும்போது வேறு சொற்கள் பயன்படுத்துகிறார்கள்.

மனித வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அந்த மாற்றங்கள் எல்லாமே நம்முள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கத்தை ஒவ்வொருவருமே தமக்கேயுரிய வழிவகைகளில் எதிர்க்கொள்கிறோம். ஒரு வேளை நம்மால் எதிர்க்கொள்ள முடியாவிட்டால்... பிரச்சினைதானே.

ஆகவே தர்க்கரீதியாகப்பார்த்தால் எல்லா மாறுதலுமே நம்மை பாதிக்கும் அபாயமுள்ளது. அது காலையில் எழுந்து பஞ்சர் ஆன வண்டியைப் பார்க்கும் எரிச்சலாகட்டும்... நம் நெருங்கிய சொந்தங்கள் இறக்கும் போது ஏற்படும் வருத்தமாகட்டும்.... பிரச்சினையே... இப்படிப்பட்ட விஷயங்களை Stressors என்று அழைக்கிறார்கள்.

நாம் அனைவரும் பிரச்சினைகளை "தமக்கேயுரிய" வழிவகையில் எதிர்க்கொள்கிறோம் என்று சொன்னேன். இதில் "தமக்கேயுரிய" என்பதுதான் முக்கியம். இந்த தனிமனித வேறுபாடுதான் எந்த ஒரு மாறுதலையும் நாம் சமாளிக்க முடியுமா? முடியாதா? என்று தீர்மானிக்கும். இதுதான் தினம் சாவை எதிர்நோக்கும் போர்வீரனை சிரிக்க வைக்கிறது, ஒரு சின்ன கண்டிப்பை கூட தாங்க முடியாமல் சோகப்பட வைக்கிறது. இந்த வித்தியாசத்தை தான் அதாவது பிரச்சினைகளை எதிர்கொள்ள கையாளும் விதத்தைதான் Stress reactivity என்று சொல்கிறார்கள்.

இறுதியாக இந்த மாறுதல்கள் எல்லாமே நம்மிடையே ஏற்படுத்தும் மாற்றங்கள், மனரீதியாக இருக்கலாம். சில சமயம் உடல் ரீதியாக இருக்கலாம். இந்த மாற்றங்களை Stress Sequlae அல்லதுStrain என்று சொல்கிறார்கள்.

பிரச்சினை,அதை எதிர்கொள்ளும் விதம், அதனால் ஏற்படும் விளைவுகள்,இந்த மூன்றும் சேர்ந்ததுதான் Stress.

ஒரு சுற்று சுற்றி மீண்டும் ஆரம்பித்த கேள்விக்கு (சற்றே மாற்றியமைத்துக்கொண்டு) வருவோம்...

Stressors என்றாலே கவலை, பதட்டம்  தரும்  விஷயங்கள் தானா?...

Stress ஆராய்ச்சியின் ஆரம்பகாலங்களிலேயே மாற்றம் எதனால் ஏற்பட்டாலும் அது ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் ஒன்று தான் என்று உணர்ந்திருந்தனர். ஆகவே நல்ல நிகழ்வுகளால்(உம். திருமணம்) வரும் அழுத்தத்தை Eustress என்றும் விரும்ப தகாத நிகழ்வுகளால்(உம். மரணம்) வரும் அழுத்தத்தை Distress என்றும் குறிப்பிட்டார்கள்.

எந்த எந்த நிகழ்வுகள் அழுத்தம் தருபவை என்று உணராமல் எப்படி ஒருவரின் Stress அளவை கண்டறிவது? இதற்கு ஒரு வழிமுறையை கண்டறிந்தார்கள். நோயாளிகளின் வியாதிக்கும் வாழ்க்கை சம்பவங்களுக்கும் ஏதும்  சம்பந்தம் உள்ளதா எனப் பலரிடம் ஒரு சர்வே நடத்தினார்கள். அதனடிப்படையில் 43 வாழ்நாள் சம்பவங்களை மனிதனை மிகவும் பாதிக்க கூடியது முதல் அதிகம் பாதிப்பில்லை என்று வகைப்படுத்தினார்கள். இந்த வரிசையில் மிக அதிக அழுத்தம் தரக்கூடியது என்ற "வாழ்க்கை துணையின் இறப்பு" என்பதற்கு 100 புள்ளிகள். மிக குறைவாக சிறு சிறு சட்டமீறல்களுக்கு 11புள்ளிகள். இவை இரண்டுக்கும் நடுவே சிறிதும் பெரிதுமாய் பற்பல நிகழ்வுகளை பட்டியலிட்டு அதற்கேற்ப மதிப்பெண்ணும் தந்திருந்தார்கள். இவற்றுள் கடந்த ஒரு வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் புள்ளிகளை கூட்டி மொத்தம் வருவதை வைத்து உங்களுக்கு Stress உடலை பாதிக்கும் அளவிற்கு இருக்கிறதா? என்று சொல்லலாம். இதை Holmes and Rahe Scale என்பார்கள்.

இந்த வழிமுறை இன்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகள் இதன் உபயோகத்தை நிரூபித்துள்ளன. ஆனால் இதில் வரும் சம்பவங்கள் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையில் அழுத்தத்தை தரும் என்பது சிலரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இதிலிருந்து மாறுபட்டு வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகினார்கள்.

என்றேனும் நிகழும் நிகழ்வுகளை விட தினம் சந்திக்கும் நிகழ்வுகளிலேயே நாம் எரிச்சலடைகிறோம், வருத்தப்படுகிறோம், சந்தோஷப்படுகிறோம். மேலே சொன்னது போன்ற நிகழ்வுகள் நம்மில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்த கூடியவை. வியாதிகளுடன் அவற்றின் தொடர்பென்பதை எளிதில் நாம் கண்டுக்கொள்ளலாம். ஆனால் இந்த தினப்படி பிரச்சினைகளை நாம் கணக்கெடுக்க முடியாது. ஆனால் நீண்டகாலமாக ஒரு கல்லின் மேல் சொட்டு சொட்டாக விழும் தண்ணீர் அதை  தகர்க்கும் வலிமை பெறுவதை போல் இவை சிறுக சிறுக ஒரு மனிதனின் சமாளிக்கும் திறனை தகர்க்கிறது. இவையே ஒரு மனிதனை மிகவும் பாதிக்கும் என்றார்கள்.

ஆகவே கவலை, பதட்டம் என்றில்லை நீங்கள் சந்தோஷப்படும் போதும் உங்கள் உடல் அதை சமாளிக்க முயற்சிக்கிறது. எதுவானாலும் எல்லை மீறும் போதும் அது உடலை பாதிக்கிறது.

இது முதல் கேள்விக்கான பதில்.

 ஏன் சிலர் அதிகம் stress அனுபவிக்கிறார்கள்? சிலர் அனுபவிப்பதில்லை. Stressக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம்?

அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

3 comments:

  1. நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. It was good article to read and eagerly waiting for next edition

    ReplyDelete

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........