Thursday, December 6, 2012

விந்தை மனிதர்கள், வித்தியாசமான வியாதிகள்...

என் அறிமுகப்பதிவிலேயே மனநோய்கள் சில சமயம் சுவாரசியமானவை என்று குறிப்பிட்டிருந்தேன். பொதுவாய் வெகு விரைவில் மறக்கப்படும் மனநோயாளிகளில் சிலர் மட்டுமே அவர்களின் வியாதியின் அறிகுறிகளால் நினைவில் கொள்ளப்படுகின்றனர். இந்தப்பதிவுத்தொடரில் அது போன்ற சில வினோத அரிய வியாதிகளையும் அவை பாதித்த மனிதர்களையும் பார்ப்போம். 

எங்கள் சிறு வயதில் ஒரு விளையாட்டு உண்டு. தீப்பெட்டிகளின் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு அவற்றை ஒரு கல் கொண்டு கொத்தி வெளியே எடுக்க வேண்டும். அந்த தீப்பெட்டி அட்டைகளில் ஒரு தகுதி வரிசை உண்டு. சிலவற்றுக்கு மதிப்பு அதிகம். முக்கியமாக ஒரு சில சமயங்களில் பின்னால் தவறுதலாக அட்டைப்படத்தை மீண்டும் அச்சிட்டிருப்பார்கள். அவற்றுக்கு இரட்டை மதிப்பு. அந்த காலத்தில் எங்கள் எல்லோருக்குமே அந்த அழுக்கு அட்டைகளை சேகரிப்பதில் ஒரு ஆர்வம்... வெறி... ஒரு நாள் நான் சேர்த்து வைத்திருந்த அழுக்கு அட்டைகளின் நாற்றம் தாங்காமல் அதை தலை முழுகி விட்டுத்தான் வீட்டுக்குள் வர வேண்டுமென்று காதைத்திருகி "அன்பு"க்கட்டளை இடப்பட்டபின் என் நண்பனிடம் அவற்றை அள்ளிக்கொடுத்தேன். அதன் பின் எப்போது அவன் அதைக் கொண்டு விளையாடினாலும் ஏக்கத்துடன் அங்கே சென்று நின்றுக்கொண்டிருப்பேன். அதன் பின் மற்ற விளையாட்டுகள் வந்தன. அந்த அழுக்கு அட்டைகளையும் அவை தந்த வருத்ததையும் நினைவுகளின் கல்லறையில் புதைத்து விட்டு வாழ்க்கையில் நகர்ந்து விட்டேன்.

நாம் எல்லோருமே ஏதோ ஒன்றை மிக ஆசையுடன் சேகரித்துக்கொண்டிருப்போம். பணம், புத்தகம், பாடல், தபால்தலை என்று நமக்கு முக்கியமாக தெரியும் அவைகள் மற்றவருக்கு குப்பையாக தெரியும். ஆனால் எல்லா சேகரிப்புகளும் ஒரு இறுதி தினமிடப்பட்டே வருகின்றன. என்றோ ஒரு நாள் சேர்த்து வைத்த அந்த பொருட்கள் அத்தனையையும் ஏதோ ஒரு காரணத்தால் இழக்கிறோம். அப்படி இழக்க விரும்பாமல் சேகரிக்கும் மனிதன் எவ்வளவுதான் சேர்ப்பான்?...

கோலியர் சகோதரர்களைச் சந்தியுங்கள்....

ஹோமர் மற்றும் லாங்க்லி
1947 ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் ஹார்லம் பகுதியிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யாரென்று சொல்லாமல்,ஒரு முகவரியைக் குறிப்பிட்டு அங்கே ஒரு பிணம் கிடப்பதாக மட்டும் சொல்லிவிட்டு வைத்து விட்டான். அந்த முகவரியின் சொந்தக்காரர்கள் கோலியர் சகோதரர்கள்.

ஹோமர் மற்றும் லாங்க்லி கோலியர்.அண்ணன் தம்பி.பிறவிப் பணக்காரர்கள்.அவர்கள் பரம்பரை சொத்துதான் அந்த வீடு. திருமணமாகாமல் தன்னந்தனியே வசித்து வந்த அவர்களுக்கு இயல்பாகவே மனிதர்களுடன் பழகுவது பிடிக்காத சங்கதியாயிருந்தது. கூடவே அந்தக் காலகட்டத்தில் ஹார்லம் பகுதி கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. திருட்டு பயமும் ஜாஸ்தி. அவர்கள் மத்தியில் யாரிடமும் பழகாத இவர்களின் குணம் ஒரு புதிராக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. அவர்களிடம் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் இருப்பதாக புரளி கிளம்ப அவர்களின் வீட்டை உடைத்து உள்ளே நுழைவதும் திடீர்திடீரென்று அழைப்பு மணியை அடிப்பது, ஜன்னல் மேல் கல் எறிவது என்று அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. மூத்தவர் ஹோமர் இதற்குள் சக்கர நாற்காலியில் மூட்டுப் பிரச்சினையால் முடங்க, இளையவர் லாங்க்லி மிகவும் பயந்து போனார். அதன் விளைவாக, அவர் மேலும் மேலும் மனிதர்களைத் தவிர்க்கத் தொடங்கினார். ஜன்னல், கதவு என்று எல்லா இடத்தையும் பெரிய பெரிய பெட்டிகள் கொண்டு அடைக்க ஆரம்பித்தார். யாரும் பார்க்காத இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வருவது, சின்னத் தேவைகளுக்குக் கூட மிகத் தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்வதென்று மேலும் மேலும் வெளியுலகத் தொடர்புகளை அறுத்தார்.

ஒவ்வொன்றாக நாகரீகம் அந்த வீட்டிலிருந்து செல்ல ஆரம்பித்தது. நாங்கள் உபயோகிக்காமல் பில் வந்துள்ளதென்று தொலைப்பேசிக் கட்டணத்தைக் கட்ட மறுக்க, தொலைப்பேசி தொலைந்தது. வருமானம் இல்லையென்று வரி கட்ட மறுக்க, மின்சாரம் மறைந்தது. தண்ணீர் இணைப்பும் அஃதே. ஆனால் எதற்கும் அசராமல் கெரசின் அடுப்பும், பதப்படுத்திய உணவுகளும் கொண்டு சமாளித்தார்.

இதற்கிடையே ஹோமருக்கு மெல்ல மெல்ல கண் பார்வை மறையத் தொடங்கியது. அதற்கும் வெளியே வராமல், தாங்களே வைத்தியம் பார்த்துக்கொள்ள கண் பார்வை போனது. இந்த சமயத்தில் ஒரு முறை ஜப்தி செய்ய வந்த போலீஸ்காரர்களையும், பேங்க் அதிகாரிகளையும் விரட்டியடித்தார்.அப்போது அங்கே இருந்த பேப்பர் மூட்டைகளைப்  பார்த்து,"இது என்ன?" என்று போலீஸ் அதிகாரி கேட்க, அண்ணனுக்கு கண் பார்வை திரும்பும்போது படிக்க என்று பதிலளித்தார் லாங்க்லி. அந்த முறை அவரின் கடன்களை ஒரே காசோலையில் தீர்க்க, அதன்பின் யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. மெல்ல சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் சீண்டலிலிருந்தும் அந்த சகோதரர்கள் மறைந்தனர்- அந்த தொலைப்பேசி அழைப்பு வரும் வரை...

அந்த வீடு
அழைப்பு மணிக்கு பதிலில்லாமல் போக, கதவை உடைத்து திறந்த போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சி. வாசலை அடைத்து பெட்டிகள். எந்தக் கதவை, ஜன்னலை உடைத்தாலும் பெட்டிகள், தடுப்புகள். அது பத்தாதென்று தாங்க முடியாத நாற்றம் வேறு. வேறு வழியில்லாமல் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட ஆரம்பித்தார்கள். முதல் தளத்தில் ஒரு வழியாக உள்ளே நுழைய இடம் கிடைத்து நுழைந்தவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. வீடு முழுக்க மேற்க்கூரையைத் தொடும் குப்பைகள்,  தினசரிகள், புத்தகங்கள், டப்பாக்கள்,குப்பையில் கிடந்த சாமான்கள், எட்டு உயிருள்ள பூனைகள் என்று பலவற்றைக் கொண்டு வீட்டை ஒரு புதிர் கிடங்காக மாற்றியிருந்தார்கள். இதில் ஆங்காங்கே குப்பைகளுக்கு நடுவே சுரங்கப்பாதைகள். அவற்றில் யாரும் நுழைவதைத் தடுக்க, கண்ணிகள். அவைகளைத் தட்டினால் அருகே இருக்கும்  குப்பை சரிந்து அமுக்கி விடும். என்னடா இதுவென்று நொந்து போன போலீஸ், அந்த குப்பைகளை கவனமாக அள்ளிக்கொட்ட துவங்கியது.
கூரையைத் தொடும் குப்பை
குப்பையின் நடுவே சுரங்கப்பாதை





இரண்டு நாட்களுக்குப் பின் ஹோமரை கண்டெடுத்தார்கள்.தன் சக்கர நாற்காலியிலேயே உணவில்லாமல் இறந்து கிடந்தார். ஆனால் லாங்க்லியைக் காணோம். தொடர்ந்து குப்பையை அள்ள, ஹோமருக்கு சற்று தொலைவிலேயே அவர் சடலமும் கிடந்தது. அண்ணனுக்கு உணவு கொண்டு வரும்போது, தவறுதலாக அவர் வடிவமைத்த கண்ணியில் அவரே சிக்கிக் கொள்ள, அவர் சேகரித்த குப்பைகளே அவரை நசுக்கிக் கொன்று விட்டது. அதன்பின் அண்ணன் பசி, தாகத்தில் இறந்திருக்கலாம் என்று போலீஸ் முடிவுக்கு வந்தது.

அந்த வீட்டை முழுவதுமாக காலி செய்ய ஒரு வாரம் பிடித்தது. அங்கிருந்து எடுத்த குப்பையின் அளவு- அதிகமில்லை ஜென்டில்மேன்.....

 140 டன்தான்!!!...

வெளிநாடுகளில் இது போல விசித்திர மனிதர்கள் அவ்வபோது செய்திகளில் தோன்றுவார்கள். அவர்கள் சேர்த்து வைக்கும் குப்பையின் அளவே அவர்களின் பிரபலத்திற்குக் காரணமாயிருக்கும். இது போன்று சேகரிப்பவர்களுக்கு என்ன பிரச்சினை?

Syllogomania or Compulsive Hoarding என்று பேன்சி பெயர்களில் இதை அழைக்கிறார்கள். பொதுவாக இது போன்று சேகரிப்பவர்களுக்கென்று சில பொதுவான குணங்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் வயதானவர்களாகவோ, மன நலம் குன்றியவர்களாகவோ இருக்கின்றனர். யாருடனும் பழகாமல் தனியாக வசிக்கின்றனர். வேறு ஏதோ மனப்பிரச்சினையின் வெளிப்பாடாகவே இது போன்று சேகரிக்கும் பழக்கம் பல சமயங்களில் உள்ளது.

இது போன்று நம் நாட்டிலும் உள்ளனரா? அதிகம் வெளியே தெரிவதில்லை. வெளிநாடுகளில் இருப்பது போன்று இல்லாமல், நம் நாட்டில் குடும்பமாய் வசிப்பதினாலும், தனி மனித சுதந்திரத்தை அவர்கள் அளவுக்கு போற்றாமல் இருப்பதாலும்,  இந்த சகோதரர்களைப் போல் இல்லாமல் சீக்கிரமே கண்டறியப்படுவது காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது "தேவையில்லாமல் குப்பையைச் சேர்க்கிறார்" என்பது போன்ற குற்றச்சாட்டை கேட்பதுண்டு. அவற்றின் அடிப்படையான மனோவியாதிக்கு வைத்தியமளித்தால் இந்த பழக்கம் குறைகின்றது அல்லது சில சமயம் மறைகின்றது.

உயிருள்ளவரை ரகசியமாக மறைக்கப்பட்ட வாழ்க்கையை மரணம் வெட்டவெளிச்சத்தில் உரித்துக் காட்டியதை காலத்தின் கோலம் என்பதைத்தவிர என்ன சொல்ல?...

5 comments:

  1. வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  2. தன் வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே யாரும் வாகனங்களை நிறுத்தக் கூடாதென்று (வாகனங்களை நிறுத்துவதால் அவருக்கு கிஞ்சித்தும் இடைஞ்சல் இல்லாமலிருந்தாலும்) கற்களைக் குவித்து வைத்து தடை செய்யும் ஒரு எழுபது வயது பெரியவருக்கு இருக்கும் மன வியாதியின் பெயர் என்ன?

    ReplyDelete
    Replies
    1. அது மன வியாதியில்லை... குணக்கோளாறு... விட்டுக்கொடுக்கும் பழக்கமில்லாத சுயநலமி...

      Delete
  3. Bipolar disorder
    என்ற மனநோயை பற்றி விரிவாக விளக்கமுடியுமா

    ReplyDelete
  4. Hello sir...Im your student..Happy to see your blog..very informative sir!! Best wishes:)

    ReplyDelete

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........