Tuesday, June 4, 2013

பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பிரச்சினைகள் இல்லாத குடும்பமில்லை. என்னிடம் வேறு காரணங்களுக்காக வரும் பெண்கள் கூட தங்களின் கணவர்களைப் பற்றி பேசும் போது ஒரு குறையுடனே பேசுகிறார்கள். பல சமயங்களில் அது கணவன் தன்னுடன் இருக்கும் நேரம் போதவில்லை என்பதே. நேரம் என்று இங்கு குறிப்பிடுவது “Quality Time”. தன்னுடன் பேச, சிரிக்க, இன்று என்ன நடந்ததென்று கேட்க நடந்ததை சொல்ல என்று கணவர்கள் நேரம் செலவழிப்பதில்லை என்பதே அவர்களின் வருத்தம். இன்னும் ஒரு சாரார் உண்டு. “லவ் மேரேஜ்தான் சார். லவ் பண்ணப்போ விழுந்து விழுந்து கவனிச்சார். இப்போ கண்டுக்கறதேயில்லை” என்று. இவர்கள் யாரும் கணவர் நல்லவரில்லை என்று சொல்வதில்லை. 

“நல்லவர்தான் ஆனால்...” 

பல சமயங்களில் இவர்கள் கணவர்களிடம் பேசினால் “பேசாம இல்லையே சார்! பாருங்க போன வாரம் கூட வெளியே போனோம்... நான் எல்லாம் நல்லாத்தான் பண்ணறேன்... இவதான் என் ஒர்க் புரிஞ்சுக்காம உயிரை எடுக்காரா சார்!” என்பதே இவர்களின் பதிலாய் இருக்கும். 

யார் மேல் தவறு?

உண்மையில் இருவர் பேரிலும் இல்லை. இது இயற்கையும், சமுதாயமும் நம்மை வயரிங் செய்ததில் உள்ள பிரச்சினை. 

ஆண்கள் அடிப்படையில் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பு கொடுப்பதில்லை. அவர்களுக்கு கோடிட்ட இடங்களை நிரப்ப தெரியாது. தரப்படும் குறிப்புகளை புரிந்துக்கொள்ள தெரியாது. நான் உனக்காக சம்பாதிக்கிறேன். உனக்கு உண்மையாக இருக்கிறேன். உன்னிடம் உள்ள அன்பை வெளிக்காட்ட இது போதும் என்பது ஆண்களின் கட்சி. காதில் வந்து காதல் சொல்ல வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றாது. அது செயற்கை என்றுக்கூட அவர்கள் நிராகரிப்பார்கள். To them, action means appreciation. காரணம் அவர்களுக்கு அது தேவையில்லை. அதே போல் நம் சமுதாயமும் ஆண்கள் காதல் உணர்வுகளை வெளிக்காட்டுவதை ஒரு அசூயையுடனே பார்க்கிறது. கிண்டல், அவமானப்படுத்துதல் மூலம் அந்த உணர்வுகளை தடுக்கவே செய்கின்றது. காதலிக்கும் போது கவிதை எழுதினேன் என்பதை நடுத்தர வயதில் தைரியமுடன் ஒப்புக்கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர்? 

இதற்கு நேர்மாறாக பெண்களின் அன்பு வெளிப்படுவது வேறுவகையில். அவர்கள் எதிர்ப்பார்ப்பது “உணர்வு கலந்த” பாராட்டை. இட்லி சாம்பார் செய்வதில் இருந்து இதிகாசம் எழுதுவது வரை எது செய்தாலும் பெண்கள் பாராட்டை எதிர்ப்பார்க்கிறார்கள்.

“சாப்பாடு எப்படி இருந்துச்சு?”
“ஹ்ம்ம்!! நல்லா இருந்துச்சு...”
“ஏன் அத சொன்னா என்னவாம்? வாயே வராதே...”
“சாப்பாடு மிச்சம் வைக்காம சாப்பிட்டாலே அதான் அர்த்தம்”

இது போல உடையில், நகையில் என எல்லாவற்றிலும் பெண்கள் பாராட்டை எதிர்ப்பார்க்கிறார்கள். கிடைக்காதப்பொழுது ஏமாற்றம் அடைகிறார்கள். எல்லா பெண்களும் எல்லா நேரங்களிலும் இதை எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனால் எதிர்ப்பார்க்காத பெண்கள் யாருமில்லை. 
இது பெண்களுக்கு மட்டுமே உள்ள குணமா? என்றால் ஆண்களும் பாராட்டை விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அது தன் மனைவியிடமிருந்தே வர வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஆணின் மிக முக்கிய அங்கீகாரம் சமுதாயத்திடமிருந்துதான். 
இதற்கு பல்வேறு உளவியல் காரணங்கள் சொல்கிறார்கள். பரிமாண வளர்ச்சியில் பெண்களின் நோக்கம் இனவிருத்தி. ஆகவே பெண் மிருகங்கள் ஆண் மிருகங்களின் ஈர்ப்புக்காக போட்டி போடுகின்றன. காரணம் எந்த இனத்திலும் பெண் மிருகங்களின் குழந்தை பெறும் தன்மையிருக்கும் காலம் மிக குறைவு. ஆண்களுக்கு அதிகம். அதுவே ஒரு ஆண் மிருகம் பல பெண் மிருகங்களை தேடி செல்ல வாய்ப்பாக அமைகிறது. இது சமூக சட்டங்களால் கட்டப்பட்ட மனித சமுதாயத்தில் வேறு விதமாக மாற்றம் கொள்கிறது. பெண் ஆணை தக்க வைக்க போராடுகிறார்கள். அதன் ஒரு பகுதியே என்னைப்பார், என்னை பாராட்டு என்ற இந்த மறைமுக இறைஞ்சல். இது ஒரு சாராரின் வாதம்.

இது ஆணாதிக்கம் நிறைந்த வாதம். எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாதது. பலர் ஏற்கவுமில்லை. அதன் மாற்றாக வேறு ஒரு வாதம் உண்டு.

இந்த சமுதாயத்தில் பிறந்த உடனேயே ஆண் பெண் என இரு பாலினங்களுக்கும் சில விதிகள் வகுக்கப்படுகின்றன. ஆண் –வெளியில் விளையாட வேண்டும்; உடல் சார்ந்த விளையாட்டு அதிகம் வேண்டும். பெண்களோ- அழகியல் சார்ந்த விளையாட்டுகள் அதிகம் ஈடுபட வேண்டும். கோலம் போடுவது,தையல் இப்படி பிறந்ததிலிருந்து அழகியலை, அதற்கான பாராட்டை எதிர்பார்ப்பதையும் இந்த சமூகம் பெண்களிடம் ஊட்டுகிறது. ஆனால் ஆண்களுக்கு இந்த அழகியல் சார்ந்த விஷயங்கள் “பொம்பளை சமாச்சாரம்” என்று ஒதுக்கவே சமூகம் கற்றுக் கொடுக்கிறது. இது தலைமுறையாய் தொடரும் போது, அப்பாவை ஆதர்சமாய் கொள்ளும் மகன்களும், அம்மாவிடம் அப்பா நடந்தது போலவே நடக்கிறார்கள்.

“சமையல்லாம் ஒரு மேட்டரா? டிரஸ் நகையெல்லாம் நான் select செய்ய 5 நிமிஷம் கூட ஆகாது. அதெல்லாம் பாராட்ட வேண்டியதில்லை”.

ஆகவே பாராட்டை எதிர்பார்க்காமல் ஒரு பெண் இருக்க வேண்டுமானால், அவள் ஆண்கள் மட்டுமுள்ள சமூகத்திலிருந்தால்தான் சாத்தியம். (முக்கியமான ஒன்று! இது பொது விதி. விதி விளக்குகளை தவறு சொல்வதில்லை இதன் நோக்கம்.)

அப்படியென்றால், “ஹையோ! எப்படி அழகாக பல் விளக்கறே! ச்சே! இப்படியெல்லாம் யாருமே வாய் கொப்பளிக்க மாட்டாங்க தெரியுமா!” என்று காலையிலிருந்து ‘பின்றேம்மா! எப்படி இப்படி கொட்டாவி விடறே!” என்று இரவு தூங்கும் வரை விரட்டி விரட்டி பாராட்டி மிரட்ட வேண்டுமா? 

மீண்டும் கவனித்துப்பாருங்கள். நான் சொன்னது “உள்ளம் கனிந்த” பாராட்டை. சட்னி வைக்கும் முன்னமே சூப்பர் என்றால் பெண்கள் கணித்து விடுவார்கள். அவர்களுக்கு அது தேவையுமில்லை. அடுப்படியின் வெப்பத்தில் வெந்து, தன கவனம் முழுவதும் செலுத்தி, ருசி வர வேண்டும் என்ற அக்கறையுடன் செய்ததை பாராட்ட வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு. அதுதான் பெண்கள் பாஷையில் romance. .

நம் குடும்பங்களில் வரும் பிரச்சனைகளுக்கு காரணம் பெண்களின் எதிர்பார்ப்பில்லை. எது அவசியம் என்ற ஆண் – பெண் பார்வையின் வேறுபாடே. 

ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?

தனக்கு அடிமையாக வேண்டும் என்பதில்லை. தான் எந்நேரமும் கவனிக்கப்பட வேண்டும் என்பதில்லை. தன் தேவையை தானே சொல்லாமல் புரிந்து கொள்ளும் புரிதலை....

1 comment:

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........