Saturday, October 20, 2012

கம்பிகளும் தூண்களும்...

வணக்கம்!

சென்ற பதிவில் மனநோய் வருவதற்கான அடிப்படைக்காரணிகளை பார்த்தோம். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களில் யாருக்கு மனநோய் வருமென்று தீர்மானிக்கும் விஷயங்களைப் பார்ப்போம். இந்த பதிவில் நான் உபயோகித்துள்ள படம் "Stephen Stahl" என்ற விஞ்ஞானி இதை விளக்க பயன்படுத்துவது. எளிமையாக மனநோய் பற்றிய விளக்கங்கள் தருவதில் வல்லுனர். அவருக்கு நன்றி.

மனநோய் வந்தவர்களை சந்திக்கும் போது தவறாமல் கேட்கும் கேள்வி "உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மனநோய் உண்டா?" என்பதே. சில சமயம் ஆமென்று பதில் வரும். பல சமயங்களில் இல்லையென்று பதில் வரும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மனநோய் வந்தால் மற்றொருவருக்கும் வருமா... நவீன விஞ்ஞானம் இதற்கென்ன பதில் சொல்கிறது....

பொதுவாக விஞ்ஞானபூர்வமாக எந்த ஒரு நோயும் மரபுரீதியாக வருமென்று சொல்வதற்கு ஒரு கருமுட்டை இரட்டையர்களில் ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவருக்கு நோய் வரும் வாய்ப்பு எவ்வளவு என்பதே ஒரு குறியீடாக கருதப்படுக்கிறது. அதன்படி பார்த்தால் மனநோய்கள் 60சதவீகிதமே மரபு ரீதியாக வர வாய்ப்புள்ளது. அப்படியென்றால் மிச்ச 40% பேருக்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதை விளக்க ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம்.....


மனதை ஒரு தொங்குப்பாலம் போல கற்பனை செய்துக்கொண்டால், அதை தாங்கிப் பிடிக்கும் கம்பிகளே நமக்கு மரபு வழியாக வரும் நரம்பியல் அமைப்புகள். அந்த பாலத்தை கடக்கும் வாகனங்களே நம் வாழ்வில் நம்மை தாண்டும் பிரச்சனைகள். கம்பிகள் பலமாய் இருந்தால் சிறிய வாகனங்களும் (பிரச்சனைகளும் ) கடக்கலாம், பெரிய வாகனங்களும் கடக்கலாம். மனநோய் வரும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த கம்பிகள் (நரம்பியல் அமைப்புகள்) பலமற்று இருக்கின்றன. அவை எந்த அளவுக்கு பலமற்று இருக்கின்றன என்பதைப் பொருத்து எப்போது மனநோய் வருமென்று தீர்மானமாகிறது. சில கம்பிகளே பலமில்லாமல் இருக்கின்றன என்றால் அந்த பாலம் சிறிய வாகனங்களை தாங்கும். ஆனால் பெரிய வாகனங்கள் கடக்கும்போது உடையும். அதே பல கம்பிகள் உளுத்துப்போயிருந்தால் சின்ன வாகனம் கூடக் கடக்கமுடியாது.இது போலவே சிலர் சின்னப்பிரச்னையை கூட  எதிர்க்கொள்ள முடியாமல் மனநோய் வாய்ப்படுக்கின்றனர்.சிலரோ தாங்கமுடியாத பிரச்சனைகள் வரும்போதே நோயாளிகள் ஆகின்றனர்.

"சரி குடும்பத்துல நிறைய பேருக்கு இருக்கு... ஆனாலும் மனநோய் வராமா இருக்கறவங்க இல்லையா?..." மேலே இருக்கும் படத்தை நன்றாகப் பாருங்கள். அந்த பாலத்தை கம்பிகள் மட்டுமா தாங்கிப்பிடித்துள்ளன??? இருபுறமும் உள்ள தூண்களும் தாங்கியுள்ளதல்லவா... அந்த தூண்களே ஒருவரின் உளவியல்ரீதியான மற்றும் சமூகரீதியான பலம். வரும் பிரச்சனையை பகிர்ந்துக்கொள்ள யாரும் இருந்தாலே பிரச்சனையின் வீரியம் குறையும். அதேப்போல் நமக்கு தோள் கொடுக்கும் குடும்பம், உற்சாகப்படுத்தும் சூழல்கள் எல்லாமே அவசியம்.

மனநோய் வைத்தியம் என்றாலே நம்மில் பலருக்கு கவுன்சலிங்தான். உண்மையில் கவுன்சலிங் என்றால் என்ன? அதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வா? அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

1 comment:

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........