Sunday, November 11, 2012

அறிந்த வார்த்தை.... அறியாத அர்த்தங்கள்...


மின்சாரத்துடன் ஒரு கண்ணாமூச்சி ஆடி ஒரு வழியாக இந்தப் பதிவை வெளிக்கொண்டு வந்து விட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். சில நாட்களுக்கு முன் பாபு என்னைப் பார்க்க வந்தான். “உங்க அட்வைஸ் வேணும் மாமா...” என்றபடி.. “எதுக்குடா?” என்றேன். “ஒரே Stress ஆ இருக்கு. அம்மா படி படின்னு ஒரே டார்ச்சர்.” என்றான். பாபு வயது ஏழு. இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். 

Stress – இந்த தலைமுறையின் All purpose வார்த்தை. தலைவலியில் இருந்து தற்கொலை வரை அனைத்துக்கும் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? அதன் சரியான அர்த்தம் என்ன என்றால் பலர் ஒரு குழப்பமான பதிலே அளிக்கக்கூடும். அனைவரும் அறிந்த இந்த வார்த்தையின் அறியாத பல அர்த்தங்களை இந்த பதிவுத்தொடரில் பார்ப்போம்.


அறிந்த வார்த்தை அறியாத அர்த்தங்கள்....

சந்திரன் எழுந்தப்போது மணி எட்டு. க்ளையன்ட் மீட்டிங் ஒன்பது மணிக்கு. பரபரவென்று குளிக்க நுழைந்தால் தண்ணீர் வரவில்லை. அவசரத்தில் ஒரு காக்கை குளியல் போட்டுவிட்டு வெளியே வரும் போதே வேர்க்கத் துவங்கியது. பைக்கை முறுக்கி பாய்ந்து வரும்போது சிக்னல் அருகே ஆட்டோவில் லேசாக மோத ஆட்டோக்காரர் பஞ்சாயத்துக்கு வர சந்திரனுக்கு நேரமாகிறதே என்ற நினைப்போடு படபடப்பும் சேர்ந்துக்கொண்டது. ஒரு வழியாக சமாளித்து ஆபீஸ் அடைந்து டீம் லீடர் பார்த்து விடக்கூடாதே என்று பிரார்த்தனை செய்தபடி ஓடி சென்று சீட்டில் உட்காரும் போது தோழி “உன்னை கூப்பிடறாங்க” என்று ஒரு நக்கல் புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது. மேனேஜர் அறைக்குச் சென்று கதவைத் தட்டும் போது தலை விண்விண்னென்று தெறிக்க ஆரம்பித்து விட்டது. கதவைத் திறந்ததும் “என்னவோ புயலாம்ப்பா... இன்னைக்கு க்ளையண்ட் மீட்டிங் கேன்சல்... அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்...” என்றபடி அவரின் கம்ப்யூட்டரை விட்டு தலை எடுக்காமல் சொல்லி விட்டு வேளையில் முழ்கினார். சீட்டுக்கு திரும்பி வந்த சந்திரனுக்கு தலை வெடித்து விடுவது போல் வலிக்க சோர்வுடன் அரை நாள் வேலைப்பார்த்து விட்டு லீவ் சொல்லி விட்டு கிளம்பினான்.

இது ஒரு உதாரணம்தான். சந்திரனை போல் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோ ஒரு தடவை இது போல் நடந்திருக்கும். இங்கே சந்திரனின் தலைவலிக்குக் காரணம் Stress என்று நம்மில் யாராலும் சொல்ல முடியும். ஆனால் முக்கிய கேள்வி அதுவல்ல. அந்த Stress வரக் காரணம் என்ன? சந்திரனின் சோம்பேறித்தனமானப் பழக்கமா? இல்லை ஆட்டோக்காரருடன் நடந்த வாக்குவாதமா? இல்லை மீட்டிங்கை தவற விட்டால் என்னவாகுமோ என்ற கற்பனை பயமா? சுருக்கமாக சொல்வதென்றால் அந்த Stress அவனுள்ளிருந்து வந்ததா இல்லை வெளிக்காரணங்கள் உண்டாக்கியதா? 

அதேபோல் எழும் மற்றொரு கேள்வி, ஏன் மனதில் எழும் ஒரு பதட்டம் உடலியல் அறிகுறியாக வெளிப்படுகிறது? இரண்டுக்கும் இடையே என்ன தொடர்பு? சரி சந்திரனுக்கு மட்டுமேன் இந்தளவுக்கு பதட்டம் வர வேண்டும்? இதே போன்றதொரு சூழலில் மாட்டிக்கொண்ட எல்லோருமே அவனைப்போல் தான் உணர்வார்களா? ஒரே சூழல் ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான உணர்வை தோற்றுவிப்பது எதனால்?

வரவிருக்கும் வாரங்களில் இந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விடையறிவோம்.

Stress – அவசரயுகத்தின் பின்விளைவா???...

பட்டிமன்றத் தலைப்பைப்போல் தோன்றினாலும் பலர் இந்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்த உடனே சொல்வது “எங்க காலத்துலலாம் இப்படில்லாம் கிடையாது சார்... இந்த காலத்துப்பசங்க சரி இல்லை...” என்பதுதான். அது உண்மையா என்று நாம் உறுதி பண்ணிக்கொள்ள முடியாத தைரியத்தில் பேசுகிறார்களோ என்று கூட சில சமயம் தோன்றும்.

இந்த சமுதாயத்திற்கு மட்டும்தான் பிரச்சினைகள் இருக்கின்றனவா? அதிகமில்லை... ஒரு ஐம்பது வருடங்கள் பின் நோக்கி சென்றால் கூட பஞ்சமும் பட்டினியும் தினப்படி கதைகளாயிருந்தன. நம்மால் நமக்குத் தேவையான உணவைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் இறக்குமதி செய்துக்கொண்டிருந்தோம். அதை விடவா இப்பொழுது மோசமான நிலைமையிலிருக்கிறோம்? குடும்பங்கள் சிதறி விட்டன. ஒவ்வொருவரும் தனித்தீவாகி விட்டோம் என்பது உண்மையென்றாலும் மனித உணர்ச்சிகளில் ஆதாரமாக உள்ள பாசம், நட்பு மறைந்து விடவில்லையே!!! ஒவ்வொரு தலைமுறைகளும் தமக்கேயுரிய பிரச்சினைகளை சந்தித்து தீர்வு கண்டு வருகின்றன. ஆகையாலே இந்த தலைமுறைக்கு மட்டுமே இந்த அழுத்தம் இருக்கின்றது என்ற வாதமே கேள்விக்குரியது. அப்படியென்றால் வித்தியாசம் ஏற்படுத்துவது எது? Stress என்ற இந்த வார்த்தையின் அறிமுகம்தான். பழங்காலத்திலேயே நமக்கு நோய்களுக்கும் மனதைப் பாதிக்கும் சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை தெரிந்தாலும் அதை ஒரு விஞ்ஞானப்பூர்வமான விளக்கத்தின் மூலம் புரிந்துக்கொள்ள முயற்சித்தது போன நூற்றாண்டில்தான்.

Stress என்ற வார்த்தையைப் புழக்கத்தில் விட்டது Hans seyle என்ற விஞ்ஞானி. இயற்பியலில் இருந்து இந்த வார்த்தையைக் கடன் வாங்கி அவர் பிரயோகித்தார். இதன் மூலம் அவர் சொன்னது எதை? 

மனதிற்கு அழுத்தம் தரும் எந்த ஒரு உணர்வையும் அவர் Stress என்று குறிப்பிட்டார். அவரின் பின் வந்தவர்கள் பல்வேறு விதங்களில் அதை திருத்த முயற்சித்தும் அதுவே நிலைத்தது.

அழுத்தம் தரும் உணர்வு என்ற வார்த்தையை உபயோகிக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. அழுத்தம் தரும் எல்லா உணர்வுகளுமே மோசமானவையா???...

அடுத்தப் பதிவில் இன்னும் சற்றே விரிவாகப் பார்ப்போம்...

1 comment:

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........